சென்னை விமான நிலையத்தைத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். மேலும், கொள்கை அடிப்படையில் விமான நிலையங்களைத் தனியாரிடம் ஒப்படைப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) ஏற்காது என்றும் அவர் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தின் நிர்வாகத்தை மற்றொரு நிறுவனத்திடம் ஒப்படைக்கக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வன்னி அரசு, சென்னை விமான நிலையம் தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு இன்னும் தனது அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை என்றார். பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டபோது, சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வது குறித்து சட்டப்பேரவையில் பேசப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். ஏற்கெனவே சென்னை விமான நிலையத்தின் ஒரு பகுதி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டபோதே விசிக எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறிய அவர், தனியார்மயமாக்கலைத் தங்களது கட்சி கொள்கை அடிப்படையில் ஏற்காது எனத் தெரிவித்தார். மாணவர் விவகாரத்தில் திமுக மீது குற்றச்சாட்டு மாணவர் பாரதிதாசன் தொடர்பான விவகாரத்தில் விசிக அரசியல் செய்யவில்லை என்றும், திமுகதான் இதனை அரசியலாக்குவதாகவும் வன்னி அரசு குற்றம்சாட்டினார். பட்டியலின மாணவர்கள் மீது திமுகவுக்கு உண்மையான அக்கறை இருந்திருந்தால், அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித் திட்டத்தில் தகுதி பெற்ற 601 மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்கியிருக்க வேண்டும் என்றார். ஆனால், அவர்களில் 153 பேருக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வேங்கைவயல் விவகாரத்தில் திமுக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் வேங்கைவயல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தது திமுக அரசுதான் என்றும் வன்னி அரசு குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட காவலர் ஒருவர் தம்மிடம் நேரடியாகப் புகார் அளித்ததாகவும் அவர் கூறினார். இதுதொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன், அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து கேள்வி எழுப்பியதாகவும் வன்னி அரசு தெரிவித்தார். பட்டியலின மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நலன்களுக்கு எதிராக திமுக அரசு செயல்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.