சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் தனியார் கேண்டீன் மற்றும் டீ கடைகளில் வழங்கப்படும் உணவின் தரம் தொடர்பாக புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி டாக்டர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான அதிகாரிகள் குழு திடீர் ஆய்வு மேற்கொண்டது. ஆய்வின்போது, கேண்டீன் சமையலறை துர்நாற்றத்துடன் சுகாதாரமற்ற நிலையில் இருந்தது தெரியவந்தது. மேலும், உடைந்த பாத்திரங்களில் உணவு தயாரிக்கப்பட்டதுடன், சமையலறையின் சுவர்கள் மற்றும் தரைப்பகுதிகளும் முறையாக பராமரிக்கப்படாமல் அசுத்தமாக இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, கேண்டீனுக்கான உணவு உரிமம் ரத்து செய்யப்பட்டது. அங்கு உணவு விற்பனை மற்றும் விநியோகம் செய்வதற்கும் அதிகாரிகள் தடை விதித்தனர். இதே ஆய்வில், டீ கடையில் வைக்கப்பட்டிருந்த சர்க்கரையில் ஈக்கள் மற்றும் எறும்புகள் மொய்த்திருந்தது தெரியவந்தது. பிரெட், சாண்ட்விச் உள்ளிட்ட உணவுப் பொருட்களில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்படாததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், குறைந்த தரமான பொருட்கள் பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்தது. இதன் காரணமாக, டீ கடைக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கண்டறியப்பட்ட குறைகளை உடனடியாக சரிசெய்யாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.