சென்னை அருகே மாதவரம் பகுதியில் கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 27 வயது வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாதவரம் பொன்னியம்மன்மேடு பகுதியைச் சேர்ந்த அஜய் அரவிந்த் (27), பூந்தமல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் மதுரவாயல்-வண்டலூர் மேம்பாலம் வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். புழல் ரெட்டேரி அருகே மேம்பாலத்தின் இறக்கத்தில் அவர் சென்று கொண்டிருந்தபோது, புழல் பகுதியில் இருந்து மாதவரம் நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி, அஜய் அரவிந்த் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அஜய் அரவிந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு அங்கிருந்து சென்ற கன்டெய்னர் லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.