முன்னாள் மாணவி புகார்! தேனி மாவட்டம், சின்னமனூர்: சின்னமனூர் ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப் பள்ளியில் நிர்வாக முறைகேடுகள் நடைபெறுவதாக முன்னாள் மாணவி அமுதசெல்வி குற்றஞ்சாட்டியுள்ளார். பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாதது, சட்டவிரோதமாக நிர்வாகத்தை ஆக்கிரமித்திருப்பது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் மாவட்டக் கல்வித் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்தார். புகார் தொடர்பாக கல்வித் துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி உண்மை நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் சின்னமனூர் ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப் பள்ளியின் அங்கீகாரம் புதுப்பிக்கப்படாதது தொடர்பாக ஏற்கெனவே பிரச்னை எழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில், ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கப்படாதது குறித்தும் புகார் எழுந்ததாகக் கூறப்படுகிறது. பள்ளியின் அங்கீகாரம் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பான பிரச்னைகளுக்கு கல்வித் துறை உரிய தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இரண்டு புகார்கள் மீதும் சம்மந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுத்து விளக்கம் கொடுத்தால் மட்டுமே மக்களுக்கு தெளிவு கிடைக்கும் என கல்வி மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.