சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட சமூகநீதி மற்றும் உரிமை சார்ந்த முக்கிய விவகாரங்களில் திமுக பங்கேற்காமல் இருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2027-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டத்தில், மாநில மற்றும் மத்திய அரசுகளால் அறிவிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் பட்டியல்களை கணக்கெடுப்பு செயலியில் முன்கூட்டியே பதிவேற்றம் செய்து, துல்லியமான தரவுகளை சேகரிக்க வேண்டும். மேலும், குழப்பங்களுக்கு வழிவகுக்கும் 'திறந்தவெளிப் பதிவு முறையை' கைவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட அரசினர் தனித்தீர்மானத்தை முழுமையாக வரவேற்கிறேன். சமூகநீதியை வலியுறுத்தும் இந்தத் தீர்மானத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், சில நாட்களுக்கு முன்பு சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இதுதொடர்பாக சட்டப்பேரவையில் உடனடியாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், இன்று சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரலில் இந்தத் தீர்மானம் முன்கூட்டியே இடம்பெற்றிருந்தது. அதை அறிந்திருந்தபோதிலும், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவைக்கு வரவில்லை. மேலும், நேற்றைய நிகழ்வுகளை காரணம் காட்டி திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால், இன்று தீர்மானம் எடுத்துக்கொள்ளப்பட்டபோது அவர்கள் அவையில் பங்கேற்காமல் இருந்தது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரலில் தீர்மானம் ஏற்கனவே தெளிவாக இடம்பெற்றிருந்த நிலையில், நேற்றைய விவகாரத்தை காரணமாகக் கொண்டு திமுக வெளிநடப்பு செய்துள்ளது. இதன் மூலம் ஓபிசி இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு போன்ற முக்கிய உரிமைகள் சார்ந்த பிரச்சினைகளில் திமுக பங்கேற்காதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இவ்வாறு மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.