மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியில் எளிய குடும்பத்தில் பிறந்தவர் சாலமன் பாப்பையா. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், பட்டிமன்ற நடுவராக தமிழகம் முழுவதும் பிரபலமானார். நகைச்சுவையுடன் கருத்துகளை முன்வைத்து, மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பட்டிமன்றங்கள் மூலம் சாலமன் பாப்பையா தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். அவரது தமிழ்ப்பணிக்காக 2021ஆம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர், நடுவர், பதிப்பாசிரியர், நடிகர் என பல்வேறு துறைகளில் தனது பங்களிப்பை வழங்கியவர் சாலமன் பாப்பையா. மதுரை ஞானஒளிவுபுரத்தில் வசித்து வந்த அவர், வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் தனது 90-ஆவது வயதில் உயிரிழந்தார். உலகத் தமிழர்களிடையே தனது தமிழ்ப்புலமையால் தனி இடம் பெற்றிருந்த சாலமன் பாப்பையாவின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மதுரையில் சாலமன் பாப்பையாவின் உடலுக்கு அமைச்சர் நிர்மல் குமார் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சாலமன் பாப்பையாவின் மறைவு தமிழகத்திற்கு மிகப்பெரிய இழப்பு என்று தெரிவித்தார். மேலும், சாலமன் பாப்பையாவிற்கு அரசு மரியாதை வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்திவிட்டு பின்னர் தெரிவிப்பதாக அமைச்சர் நிர்மல் குமார் கூறினார்.