அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான 39 வயது லியோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்துபோட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அர்ஜென்டினா அணியின் கேப்டனாக செயல்பட்டுவரும் மெஸ்ஸி, தனது நாட்டுக்காக இதுவரை 125 கோல்களை அடித்துள்ளார். அவரது தலைமையில் அர்ஜென்டினா அணி பல்வேறு முக்கிய வெற்றிகளையும் சாதனைகளையும் பதிவு செய்துள்ளது. குறிப்பாக 2022-ம் ஆண்டு ஃபிபா உலகக்கோப்பையில் அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வென்றது. மேலும், 2014 மற்றும் 2026-ம் ஆண்டுகளில் அந்த அணி இரண்டாம் இடத்தை பிடித்தது.மெஸ்ஸி 6 உலகக்கோப்பை தொடர்களில் விளையாடியுள்ளார். இதில் 2014,2022 மற்றும் 2026 ஆகிய 3 உலகக்கோப்பைகளின் இறுதிப்போட்டிகளில் அவர்களமிறங்கியுள்ளார். 2022-ம் ஆண்டு உலகக்கோப்பையில் அர்ஜென்டினாவை சாம்பியனாக்குவதில் அவரது பங்குமுக்கியமானதாக இருந்தது.உலகக்கோப்பையின் சிறந்த வீரருக்கான விருதையும் அவர் 2 முறை பெற்றுள்ளார். கிளப் அணிக்காகவும் தொடர்ந்து விளையாடி வரும் மெஸ்ஸி, தற்போது சர்வதேச போட்டிகளில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார். இதுகுறித்து மெஸ்ஸி கூறுகையில், அர்ஜென்டினா தேசிய அணியில் இருந்து விலகுவது குறித்து பலமுறை ஆழமாக ஆலோசித்த பின்னரே இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார். கால்பந்து விளையாடுவதற்கான வாய்ப்புக்காக பல திறமையான இளம்வீரர்கள் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறும் முடிவு தனது மனதை மிகவும் பாதிப்பதாக தெரிவித்த மெஸ்ஸி,காலப்போக்கில் ஒவ்வொரு அத்தியாயமும் நிறைவுக்கு வரும் என்றும், தற்போது தனது சர்வதேச கால்பந்து பயணத்தின் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வருவதாகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.