நடிகர் சண்முக பாண்டியன் அடுத்ததாக இயக்குநர் மணிசேயோன் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார். இந்தப் படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான கேப்டன் சினி கிரியேஷன்ஸ் வெளியிட்டுள்ளது.மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். திரையுலகில் நாயகனாக நடித்து வரும் இவர், ‘சகாப்தம்’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து ‘மதுரை வீரன்’, ‘படைத்தலைவன்’, ‘கொம்புசீவி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இயக்குநர் திரு இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாணவேடிக்கை’ திரைப்படத்தில் சண்முக பாண்டியன் நடித்து வருகிறார். இப்படத்தை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்கே சுதீஷ் தயாரிக்கிறார். இதில் சரவணன், இயக்குநர் தமிழ், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, கலை இயக்குநர் கிரண், ஜெயப்பிரகாஷ், ஸ்டில்ஸ் பாண்டியன், கும்கி அஸ்வின், சாரா, படூர் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.இந்த நிலையில், சண்முக பாண்டியனின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் 10-வது திரைப்படத்தில் சண்முக பாண்டியன் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை மணிசேயோன் இயக்குகிறார்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் மற்றும் பணியாற்ற உள்ள தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.