கோவையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 3 பெண்கள் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை பாரதி நகரைச் சேர்ந்தவர் கவுதம் (34). இவர் கேரள மாநிலம் மீனாட்சிபுரம் பகுதியில் லாட்டரி சீட்டு கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்து, வாட்ஸ்-அப் மூலம் விற்பனை செய்து வருவதாக கோவை மாவட்ட எஸ்.பி. பவன்குமார் ரெட்டிக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், அவரது உத்தரவின்பேரில் ஆனைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் மற்றும் போலீசார் கவுதம் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5,900 கேரள மாநில லாட்டரி சீட்டுகளை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கவுதம் தனது உறவினர்களான ஜெயசவுந்தராயன் (32), ஜீவானந்தம் (26) உள்ளிட்டோருடன் இணைந்து கேரள மாநில ஓணம் பம்பர் லாட்டரி சீட்டுகளின் புகைப்படங்களை வாட்ஸ்-அப் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியதும், அவர்களிடம் ஆன்லைன் வழியாக பணம் பெற்றுக்கொண்டு லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கவுதம், ஜெயசவுந்தராயன், ஜீவானந்தம் மற்றும் 3 பெண்கள் என மொத்தம் 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.