கோவையில் ஆடிட்டர் ஒருவரின் வீட்டில் ரூ.15 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள வெள்ளி மற்றும் பித்தளை பொருட்களை திருடியதாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருட்டை அரங்கேற்றிய பின்னர், அதே வீட்டில் சுமார் 5 நாட்கள் தங்கியிருந்து சமையல் செய்து சாப்பிட்டு, அங்கேயே தூங்கியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவை ஒப்பணக்கார வீதியைச் சேர்ந்தவர் சேஷகிரி (70). ஆடிட்டரான இவரது மகன் பெங்களூருவில் வசித்து வருகிறார். இதனால், மகனை சந்திப்பதற்காக சேஷகிரி தனது குடும்பத்துடன் கடந்த மாதம் வீட்டை பூட்டிவிட்டு பெங்களூரு சென்றுள்ளார்.பின்னர் கோவை திரும்பிய அவர், வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தன.பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த வெள்ளித்தட்டு, வெள்ளி பூஜை பொருட்கள், சமையலறையில் பயன்படுத்தப்பட்ட வெள்ளி பொருட்கள் உள்ளிட்ட சுமார் 9 கிலோ வெள்ளிப் பொருட்களும், 7 கிலோ பித்தளை பொருட்களும் காணாமல் போயிருந்தன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.15 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.இதுகுறித்து சேஷகிரி அளித்த புகாரின் பேரில் வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையதாக கோவையைச் சேர்ந்த வெங்கடேஷ் (45), ராஜசேகர் (37), டேவிட் லிவிங்ஸ்டன் (56), மணிகண்டன் என்ற விக்கி (26), மணிகண்டன் என்ற சிறுத்தைமணி (27), ஜமீசா (45) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படும் ரூ.15 லட்சம் மதிப்புள்ள வெள்ளி மற்றும் பித்தளை பொருட்கள் மீட்கப்பட்டன.போலீசார் தெரிவித்ததாவது, சேஷகிரி குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றதை 6 பேரும் கண்காணித்துள்ளனர். பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து அங்கிருந்த பொருட்களை திருடியுள்ளனர். அதன்பிறகு, அந்த வீட்டிலேயே 5 நாட்கள் வரை தங்கியிருந்து உணவு சமைத்து சாப்பிட்டதுடன், அங்கேயே தூங்கியுள்ளனர்.மேலும், புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் கொள்ளை வழக்கில் தொடர்புடைய 6 பேரும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.