தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஓய்வுபெற்ற வனத்துறை ஊழியர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பாபா நகரைச் சேர்ந்தவர் மாடசாமி (65). வனத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், குடும்பத்தை விட்டு பிரிந்து கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள ஒரு குடியிருப்பின் கீழ்தளத்தில் தனியாக வசித்து வந்தார். இவரது மனைவியும், மகனும் கழுகுமலையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாடசாமி தனது வீட்டில் நைலான் கயிற்றைப் பயன்படுத்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மாடசாமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.