கோவில்களில் ரூ.5 கட்டணம் வசூலிப்பது ஏன்? அமைச்சர் ரமேஷ் விளக்கம்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

03 Sep 2026 www.thinathulir.com

கோவில்களில் ரூ.5 கட்டணம் வசூலிப்பது ஏன்? அமைச்சர் ரமேஷ் விளக்கம்

கோவில்களில் ரூ.5 கட்டணம் வசூலிப்பது ஏன்? அமைச்சர் ரமேஷ் விளக்கம்

தமிழ்நாட்டில் உள்ள 52 முக்கிய கோவில்களில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பாக லாக்கரில் வைக்க ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் விமர்சனம் தெரிவித்திருந்தனர்.இந்நிலையில், கோவில்களில் ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுவதற்கான காரணம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவில்களில் செல்போன் பயன்படுத்துவதற்கான தடை தற்போது புதிதாக கொண்டு வரப்பட்ட நடைமுறை இல்லை என்று தெரிவித்தார். திருச்செந்தூர் கோவிலுக்குள் செல்போன்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கக் கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்களில் செல்போன்களை கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பின்னர் பல கோவில்களில் செல்போன்களை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. அப்போது முதல் செல்போன் பாதுகாப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டு, ரூ.5 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த இந்த ஏற்பாடு, 52 முக்கிய கோவில்களில் கவுண்டர்கள் இல்லாததால் தற்போது அங்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். அதேநேரத்தில், செல்போன்களை ஒப்படைப்பதற்காக பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடாது என்றும், இந்த நடைமுறை பக்தர்களுக்கு சிரமமாக மாறக்கூடாது என்றும் கோவில் நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.மேலும், கர்ப்பிணிகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த செல்போன் கட்டுப்பாடு பொருந்தாது என்றும் அமைச்சர் ரமேஷ்குறிப்பிட்டார்.கோவில்களின் நிதிநிலையை கருத்தில் கொண்டு ரூ.5 கட்டணம் வசூலிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை அந்தந்த கோவில்களே முடிவு செய்யலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கோவில்கள் இருக்கக்கூடாது என்று கருதுபவர்கள்தான் இந்த விவகாரம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்புவதாகவும் அவர் தெரிவித்தார்.பக்தர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் நோக்கத்திலேயே கோவில்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கினார். வரலாற்று சிறப்பு வாய்ந்த கோவில்களில் பல இடங்களில் தமிழ் கல்வெட்டுகள் மற்றும் எழுத்துகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை பக்தர்கள் கவனித்து பார்க்க வேண்டும் என்பதற்காகவும், செல்போன் பயன்பாடு அதற்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதற்காகவும் நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்களிலும் சில கோவில்களில் செல்போன்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்றும், இந்த விவகாரத்தை அரசியல் பிரச்சினையாக்க வேண்டாம் என்றும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.செல்போன் தடையால் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுவது தெரியவந்தால், அதனை சரிசெய்ய தேவையான மாற்று ஏற்பாடுகள் நிச்சயம் செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.மேலும், கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் செல்போன்களை பாதுகாப்புக்காக வாங்க வேண்டாம் என்றும் கோவில் நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.