திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள ஆண்டவர் உத்தரவு பெட்டி உலகப் புகழ்பெற்றதாகும். இந்த நிலையில், நேற்று மதியம் சிவன்மலை கோவில் மேற்பகுதியில் ஒதுக்குப்புறமாக ஒரு கார் நீண்ட நேரமாக நின்றிருந்தது. காருக்குள் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபரும், இளம்பெண் ஒருவரும் இருந்ததாக கூறப்படுகிறது. சுமார் 2 மணி நேரமாக இருவரும் காரை விட்டு வெளியே வராமல் இருந்ததால், சந்தேகம் அடைந்த கோவில் பணியாளர்கள் காரின் அருகே சென்று பார்த்தனர். அப்போது, காரில் இருந்த வாலிபர் பணியாளர்கள் மீது மோதுவது போல் காரை வேகமாக ஓட்டியுள்ளார். பின்னர் கோவில் அடிவார நுழைவாயில் பகுதிக்கு வந்த கார், அங்கிருந்த தடுப்பில் லேசாக மோதி நின்றது. இதையடுத்து பணியில் இருந்த கோவில் ஊழியர்கள் காரை சுற்றிவளைத்தனர். தொடர்ந்து வாலிபரிடம் விசாரணை நடத்தியதில், அவர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், காரில் இருந்த இளம்பெண் கல்லூரி மாணவி என்பதும் தெரியவந்தது. மேலும், இருவரும் காதலர்கள் என தெரிவித்துள்ளனர். கோவில் வளாகத்தின் புனிதத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாக கூறி, இருவருக்கும் கோவில் பணியாளர்கள் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். இருப்பினும், கோவில் வளாகத்திலேயே இதுபோன்ற சம்பவம் நடந்தது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.