பணம், புகழ் என அனைத்தும் இருந்தாலும் வாழ்க்கையில் முழுமையான மனநிறைவு கிடைக்காது என்பதை உணர்ந்த தாய்லாந்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தனது சொத்துகளை விட்டுவிட்டு துறவற வாழ்க்கையைத் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளார்.தாய்லாந்தில் 1999-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரபலமான ‘ஹாவெல்ஸ்’ ஐஸ்கிரீம் நிறுவனத்தின் நிறுவனர் சிரிபோங் அக்காரஸ்ரியுக். பல ஆண்டுகளாக மேற்கொண்ட கடின உழைப்பின் மூலம் அவர் இந்த நிறுவனத்தை வளர்த்தெடுத்துள்ளார்.தற்போது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய தனது நிறுவனத்தை முழுமையாக விற்பனை செய்துவிட்டு, காட்டில் துறவியாக வாழ சிரிபோங் முடிவு செய்துள்ளார். அவரது இந்த முடிவு தொழில்துறையினர் மத்தியில் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.தாய்லாந்தில் ‘ஹாவெல்ஸ்’ நிறுவனம் பிரபலமானதாக இருந்தபோதிலும், தனது நீண்டகால ஆன்மிக விருப்பத்தை நிறைவேற்றும் நோக்கிலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாக சிரிபோங் தெரிவித்துள்ளார். இதற்கான நிறுவன விற்பனை அறிவிப்பையும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.