தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் அட்டைகளில் இடம்பெற்றுள்ள பயனாளிகளின் ஆதார் விவரங்களை சரிபார்க்கும் நடவடிக்கையாக, கைவிரல் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, குடும்ப உறுப்பினர்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாத வகையில், கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ரேஷன் அட்டைதாரர்களின் கைவிரல் ரேகை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை முன்னுரிமை ரேஷன் அட்டைகளில் 96.21 சதவீதம் கைவிரல் ரேகை சரிபார்ப்பு நிறைவு பெற்றுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.மீதமுள்ள பணியையும் முழுமையாக முடிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று (29-ந் தேதி) சிறப்பு முகாம் நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறும்.இதுவரை ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்யாமல் விடுபட்டுள்ள ரேஷன் அட்டைதாரர்கள், இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி தங்களது கைவிரல் ரேகையை பதிவு செய்து கொள்ளுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.