தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று (சனிக்கிழமை) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், கே.என்.நேருவும் தி.மு.க.வும் புதிய அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு அஞ்சப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.அவர் தனது பதிவில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சட்டமன்றக் கூட்டத்தொடரும் நடைபெறுகிறது. இந்த சூழலில், தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவை குறிவைத்து அரசியல் நோக்கத்துடன் இந்த சோதனை நடத்தப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.ஆட்சி அமைப்பதற்காக பிற கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து, சட்டமன்ற வளாகத்திலேயே அவர்களை தங்கள் கட்சியில் இணைத்தது குறித்தும், அது தொடர்பான புகார்களில் லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கைகூட பதிவு செய்யாதது குறித்தும் தமிழக மக்கள் நன்கு அறிந்திருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இந்திய ஜனநாயகத்தின் இருண்ட பக்கமாக இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் நிலையில், மக்களின் கவனத்தை திசைதிருப்பும் முயற்சியாக தற்போதைய அரசு செயல்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.மேலும், இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு கே.என்.நேருவும், தி.மு.க.வும் அஞ்சப்போவதில்லை என்றும், அனைத்து விவகாரங்களையும் சட்டத்தின் அடிப்படையில் எதிர்கொண்டு வெற்றி பெறுவோம் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.