தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சீசன் களைகட்டும். இந்த காலகட்டத்தில் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகை தருவார்கள். தொடர்ந்து மழை பெய்தால் சீசன் மேலும் சில நாட்களுக்கு நீடிப்பதும் வழக்கம். இந்த ஆண்டு எல் நினோ காரணமாக தென்மேற்கு பருவமழை இயல்பைவிட குறைவாகவே பெய்தது. இதன் தாக்கமாக குற்றாலத்தின் பல்வேறு அருவிகளில் பல நாட்களாக குறைந்த அளவிலேயே தண்ணீர் வரத்து காணப்பட்டது.இந்நிலையில், தற்போது அருவிகளில் நீர்வரத்து முற்றிலும் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இதனால் குற்றால சீசனும் முடிவுக்கு வந்துள்ளது. அருவிகளில் குளிப்பதற்காக வந்த சுற்றுலா பயணிகள் தண்ணீர் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.