கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பருவமழையை எதிர்பார்த்து சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலை பயிர்களில் சுமார் 90 சதவீதம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் பெரும் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.மாவட்டத்தின் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் பருவமழையை நம்பி 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி செய்திருந்தனர். ஆனால், எதிர்பார்த்த மழை கிடைக்காமல் வானிலையில் ஏற்பட்ட மாற்றங்களால் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கோடை காலத்தில் மழையும், பருவமழை காலத்தில் வெயிலும் நிலவும் மாறுபட்ட வானிலை காரணமாக, பருவமழையை நம்பி பயிரிடப்பட்ட நிலக்கடலை பயிர்களில் பெரும்பகுதி வறட்சியின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது. அறுவடைக்கு தயாராகும் நிலையில் பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதையடுத்து, வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பயிர்களின் நிலையை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், வறட்சியால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.