கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கிச்சா சுதீப், தனது அடுத்தடுத்த படங்களால் கவனம் ஈர்த்து வருகிறார். தமிழில் ‘நான் ஈ’, ‘அருந்ததி’, ‘புலி’ உள்ளிட்ட படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானார். அவரது நடிப்பில் வெளியான ‘மேக்ஸ்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.தற்போது அனூப் பந்தாரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘பில்லா ரங்கா பாட்ஷா’ படத்தில் சுதீப் நடித்து வருகிறார். திரையுலகில் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அவருக்கு, பிறந்தநாளை முன்னிட்டு புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.விஜயநகரப் பேரரசின் புகழ்பெற்ற மன்னரான ஸ்ரீ கிருஷ்ணதேவராயரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் ‘தேவராயா’ திரைப்படத்தில் சுதீப் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படம் 2027-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.பீப்பிள் மீடியா பேக்டரி மற்றும் சுப்ரியன்வி பிக்சர் ஸ்டுடியோ இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. இதன் தலைப்பு அறிவிப்பு வீடியோவும் வெளியாகியுள்ளது.அதில் பாரம்பரிய அரச உடையில், நவரத்தினங்கள் மற்றும் முத்துக்கள் பதிக்கப்பட்ட பிரம்மாண்டமான கிரீடத்துடன் சுதீப் கம்பீரமாக காட்சியளிக்கிறார். இந்த தோற்றம் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.ஆரம்பக்கட்ட அறிவிப்பு வீடியோவில் சண்டைக் காட்சிகளோ, வசனங்களோ இடம்பெறவில்லை. சுதீப்பின் முகபாவனைகள் மற்றும் அவரது கம்பீரமான தோற்றத்தின் மூலமாகவே கதாபாத்திரத்தின் அரச கம்பீரம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.கௌரா ஹரி கே-வின் பின்னணி இசையும், அந்தக் காலகட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கலை வடிவமைப்பும் படத்தின் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.“வரலாற்றை செதுக்கிய ஒரு பேரரசு, ஒரு சகாப்தத்தை வரையறுத்த மன்னன், காலத்தைக் கடந்து வாழும் ஒரு ஜாம்பவான்” என்ற கருத்துடன் படக்குழு ‘தேவராயா’ திரைப்படத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.எனினும், இப்படத்தின் இயக்குநர் யார் என்பதும், மற்ற நடிகர், நடிகைகள் குறித்த விவரங்களும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.