தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தை 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்துவது தொடர்பான கோரிக்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட முதல்-அமைச்சர் காலை உணவுத் திட்டம், தற்போது ‘காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் வரும் 17-ந் தேதி முதல் விரிவுபடுத்தப்பட உள்ளது. விருதுநகரில் காமராஜர் படித்த தொடக்கப் பள்ளியில் நேரடியாகச் சென்று முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இந்த விரிவாக்கத்தை தொடங்கி வைக்க உள்ளார்.இதற்கிடையே, கோவையைச் சேர்ந்த சி.ஐ.டி.யு. பொதுத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பாஷா, காலை உணவுத் திட்டத்தை 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என தமிழக அரசின் சமூக நல இயக்குநரகத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.அந்தக் கடிதத்தில், குறிப்பாக 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் சூழலில், அவர்களின் உடல் மற்றும் மனநலம், கவனச்செலுத்தும் திறன் மற்றும் கல்விச் செயல்திறனை மேம்படுத்த போதிய ஊட்டச்சத்து அவசியம் என அவர் குறிப்பிட்டிருந்தார்.இந்த கோரிக்கைக்கு சமூக நல இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநர் கா.பொற்கொடி பதில் அளித்துள்ளார். அதில், எஸ்.பாஷாவின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதாகவும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்த கோரிக்கை தமிழக அரசின் கவனத்துக்கு தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.