தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்’ விரிவுபடுத்தப்பட உள்ள நிலையில், இதற்கான தொடக்க விழா தேதி மாற்றப்பட்டுள்ளது. முதலில் நாளை தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டிருந்த இந்த திட்ட விரிவாக்கத்தின் தொடக்க விழா, தற்போது வரும் 22-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய் கலந்து கொண்டு, விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு திட்டம், தற்போது 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் நடுநிலைப்பள்ளி மாணவர்களும் இத்திட்டத்தின் மூலம் காலை உணவு பெறும் வாய்ப்பைப் பெற உள்ளனர். இந்த விரிவாக்கத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 15,910 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 15,30,141 மாணவர்கள் பயன்பெற உள்ளதாக அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் நடைபெறுவதால் செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களைத் தவிர்த்து, தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இந்த திட்ட விரிவாக்கம் செயல்படுத்தப்பட உள்ளது.