உத்தர பிரதேசத்தின் கான்பூரைச் சேர்ந்த பி.டெக் தங்கப் பதக்கம் பெற்ற இளைஞர் ஒருவர், அரசு வேலை கிடைக்காத மனவேதனையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கான்பூர் நகரின் கோவிந்த் நகர் பகுதியில் வசித்து வந்த 23 வயதான ஆனந்த் குமார், 2024-ஆம் ஆண்டு தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் படிப்பில் தங்கப் பதக்கம் வென்றதுடன், மாநில அளவில் மூன்றாவது இடத்தையும் பிடித்திருந்தார். கல்லூரி விழாவில் உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் பட்டேலிடம் இருந்து தங்கப் பதக்கத்தை பெற்றிருந்தார்.இந்த நிலையில், அவரது குடும்பத்தினர் மூத்த சகோதரரின் திருமண ஏற்பாடுகளுக்காக பீகாரில் உள்ள சொந்த ஊருக்கு சென்றிருந்தனர். வீட்டில் தனியாக இருந்த ஆனந்த், தனது அறையில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அவர் எழுதி வைத்திருந்ததாகக் கூறப்படும் தற்கொலைக் குறிப்பு கைப்பற்றப்பட்டது. அதில், தனது தந்தையிடம் மன்னிப்பு கோரியிருந்ததுடன், அரசு வேலைக்காக 50-க்கும் மேற்பட்ட தேர்வுகளில் முயற்சி செய்தும் வெற்றி பெற முடியவில்லை என்று குறிப்பிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.ஆனந்தின் தந்தை ராஜ்குமார் கூறுகையில், ரெயில்வே, வங்கி, கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு அமைப்புகள் நடத்திய தேர்வுகளில் அவரது மகன் தொடர்ந்து பங்கேற்றதாகவும், எந்தத் தேர்விலும் வெற்றி பெறாததால் கடந்த சில மாதங்களாக கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும் கண்ணீருடன் தெரிவித்தார்.அரசு வேலை கிடைக்காத ஏமாற்றம் காரணமாக, கல்வியில் சிறந்து விளங்கி ஆளுநரிடம் தங்கப் பதக்கம் பெற்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.