தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பரமன்பச்சேரி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் சமுத்திரவேல் (48). கொத்தனாராக பணியாற்றி வரும் இவரது மனைவி மாரியம்மாள். இவர்களது மூத்த மகள் ஸ்ரீவள்ளி (18). இவர் சில்லாங்குளத்தில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்சி. படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல் சமுத்திரவேல் வேலைக்குச் சென்றுள்ளார். மாரியம்மாளும் ஆடு மேய்க்க வெளியே சென்றுள்ளார். மாலையில் மாரியம்மாள் வீடு திரும்பியபோது, வீட்டின் மின்விசிறி பொருத்தப்படும் கொக்கியில் சேலையால் ஸ்ரீவள்ளி தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த உறவினர்கள் உதவியுடன் ஸ்ரீவள்ளியை தூக்கிலிருந்து கீழே இறக்கியுள்ளனர். ஆனால், அதற்குள் அவர் உயிரிழந்திருந்தது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பசுவந்தனை காவல் நிலைய போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக மாணவியின் தந்தை சமுத்திரவேல் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீவள்ளி தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.