நாமக்கல் மாவட்டம் பிலிக்கல்பாளையம் அருகே வீட்டுக்குள் புகுந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள், கணவன்-மனைவியை கட்டிப்போட்டு மிரட்டி, 40 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.40 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பரமத்திவேலூர் தாலுகா, பிலிக்கல்பாளையம் அருகே சினிமா கொட்டகை மேடு பகுதியில் இருந்து சின்னமருதூர் செல்லும் சாலையோரத்தில் வைரவன் (60) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 20 ஆண்டுகளாக இவர் வெல்லம் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சுமதி (55). இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்ட நிலையில், வைரவன் மற்றும் சுமதி மட்டும் வீட்டில் வசித்து வந்தனர்.இந்நிலையில், நேற்று நள்ளிரவு 12 மணியளவில் முகமூடி அணிந்த 4 பேர் கொண்ட கும்பல், வைரவனின் வீட்டின் காம்பவுண்ட் சுவரில் ஏறி குதித்து வீட்டுக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. முதலில் மாடியில் உள்ள அறைகளை சோதனையிட்டுள்ளனர். அங்கு எதுவும் கிடைக்காததால், கீழ் பகுதியில் இருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.கதவு உடைக்கப்பட்ட சத்தம் கேட்டு சுமதி எழுந்து வந்தபோது, வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் கணவன், மனைவி இருவரையும் பிடித்து கட்டிப்போட்டுள்ளனர். பின்னர் வீட்டில் பணம் மற்றும் நகைகள் எங்கு வைக்கப்பட்டுள்ளன என்று கேட்டு மிரட்டியுள்ளனர். தகவல் தெரிவிக்காததால் வைரவனை கத்தியால் கிழித்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து தம்பதியை இறுக்கமாக கட்டிவைத்த கொள்ளையர்கள், வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதற்குள் வைக்கப்பட்டிருந்த 40 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.40 லட்சம் ரொக்கத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.கொள்ளை நடந்தது குறித்து வைரவன் உடனடியாக ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர பாண்டியன், பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.மேலும், சம்பவம் குறித்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரீஸ் அசோக் மற்றும் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வெண்ணிலா ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.இதனைத் தொடர்ந்து கொள்ளையர்களின் தடயங்களை கண்டறிய மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். வீட்டில் இருந்து வெளியேறிய மோப்ப நாய், சின்னமருதூர் செல்லும் சாலையை நோக்கி ஓடி, சிறிது தூரம் அந்த வழியில் சென்றது. இதனிடையே கைரேகை நிபுணர்கள் வீட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவாகியிருந்த கைரேகைகளை சேகரித்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக ஜேடர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் வழக்குப்பதிவு செய்துள்ளார். மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் நள்ளிரவு நேரத்தில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை பிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.கணவன், மனைவியை கட்டிப்போட்டு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.