சென்னை மாநகராட்சி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள கடைகளில் தமிழில் பெயர் பலகை அமைக்க வேண்டும் என தமிழக அரசு கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டது. பெயர் பலகையில் முதலில் தமிழில் பெயர் இடம்பெற வேண்டும் என்றும், அதன் கீழ் ஆங்கிலத்தில் பெயரை குறிப்பிடலாம் என்றும் அரசு அறிவித்திருந்தது. இந்த விதியை பின்பற்றாத கடைகளுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து மும்பையை தலைமையிடமாகக் கொண்ட இந்திய சில்லறை வர்த்தகர்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி கே.சுரேந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் உத்தரவை செயல்படுத்த சங்கம் தயாராக இருப்பதாகவும், அதற்காக 3 மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.இந்த கோரிக்கையை நீதிபதி ஏற்றுக்கொண்டார். அதன்படி, கடைகளின் பெயர் பலகைகளை தமிழில் மாற்றுவதற்கு நவம்பர் 1-ந்தேதி வரை இறுதி அவகாசம் வழங்கப்பட்டது. அதற்குள் பெயர் பலகைகளை மாற்றாத கடைகள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.இதையடுத்து, இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.