கடலூரில் தங்க செயினுடன் விநாயகர் சிலை கரைப்பு: நகையை தேடும் பணி தீவிரம் நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 14-ந்தேதி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி வீடுகள் மற்றும் பொது இடங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், பல்வேறு நீர்நிலைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டு வருகின்றன. கடலூர் மாவட்டம் வண்ணாரப்பாளையத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி, தனது வீட்டில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைக்கு ஒன்றரை பவுன் எடையுள்ள தங்க செயினை அணிவித்திருந்தார். பின்னர், 3-வது நாளில் அந்த சிலையை கடலூர் தேவனாம்பட்டினம் அருகே உள்ள உப்பனாற்றுக்கு எடுத்துச் சென்று கரைத்தார். சிலை கரைக்கப்பட்ட பின்னரே அதற்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க செயின் நினைவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் ஆற்றில் தேடுதல் நடத்தப்பட்டது. எனினும், நகை கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து, உப்பனாற்றின் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தொடர்ந்து தங்க செயினை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.