கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் மனிதர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி, அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் 48 மணி நேர கடையடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது.கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட லாரஸ்டன் பகுதியில் பாலகிருஷ்ணன், ரவிச்சந்திரன் ஆகிய இருவரை புலி தாக்கி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தப் புலியை சுட்டுப் பிடிக்க வேண்டும், வனவிலங்குகளிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கூடலூர் தொகுதியில் நீண்டகாலமாக உள்ள செக்சன்-17 நிலப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.இதற்கிடையே, இருவரை கொன்ற புலியை கண்டறிந்து பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் கடந்த ஒரு வாரமாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இந்த சூழலில், கூடலூர் நகருக்குள் மற்றொரு புலியும் பகல் நேரத்திலேயே குடியிருப்பு பகுதிகளில் நடமாடி, கால்நடைகளை வேட்டையாடி வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. விமலகிரி, புத்தூர் கவலை, மார்த்தோமா நகர் உள்ளிட்ட பகுதிகளில் அந்தப் புலி தொடர்ந்து கால்நடைகளை கொன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து வனத்துறையினர் அப்பகுதிகளில் கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.நேற்று மதியம் சுமார் 1 மணியளவில் கூடலூர் அத்திப்பாளி அரசு பள்ளி அருகே உள்ள குடியிருப்புகளின் முன்பாக புலி ஒன்று வந்து நின்றது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இருப்பினும், புலி எந்த பதற்றமும் இன்றி அங்கிருந்தவர்களை பார்த்தபடி இருந்தது.இதனால் பொதுமக்கள் சத்தம் எழுப்பியதை தொடர்ந்து, அங்கிருந்து ஓடிய புலி கூடலூர்-ஸ்ரீமதுரை சாலையை கடந்து தேயிலை தோட்டத்திற்குள் சென்றது. பட்டப்பகலில் குடியிருப்புகள் முன்பு புலி வந்த தகவல் பரவியதை அடுத்து ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், புலியின் கால் தடயங்களை ஆய்வு செய்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர்.இதனிடையே, கூடலூர் அருகே நாலாம் நம்பர் பகுதியில் இருவரை கொன்ற ஆட்கொல்லி புலியை கண்காணித்து பிடிக்கும் பணிக்காக முதுமலையில் இருந்து 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. மேலும், 120-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் புலியை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.