கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே ஆடு மேய்த்துவிட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த பெண் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் அருகேயுள்ள துணிசரமேடு கிராமத்தின் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். கட்டிடத் தொழிலாளியான இவரது மனைவி ஞானசுந்தரி (38). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்தது. அப்போது ஞானசுந்தரி அப்பகுதியில் ஆடுகளை மேய்த்துவிட்டு, வயல்வெளியில் இருந்து பிரதான சாலை வழியாக வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்னல் தாக்கியது. இதனால் நிலைகுலைந்த ஞானசுந்தரி சாலையில் சரிந்து விழுந்தார். இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சிதம்பரம் தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மழையின்போது மின்னல் தாக்கி இரண்டு மகன்களின் தாயான ஞானசுந்தரி உயிரிழந்த சம்பவம், அவரது குடும்பத்தினரையும் கிராம மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.