காஞ்சீபுரம் அருகே கடன் விவகாரம் தொடர்பாக 9 மாத கர்ப்பிணிப் பெண்ணும், அவரது பச்சிளம் குழந்தையும் உயிரிழந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: காஞ்சீபுரம் அருகே சிங்காடிவாக்கம் பழங்குடியினர் (இருளர்) காலனியில் வசித்து வந்த தேன்மொழி என்ற பெண், 9 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவரது பச்சிளம் குழந்தையுடன் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. தார்ப்பாய் கொட்டகையில் வசித்து வந்த தேன்மொழிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனைக்குச் செல்ல அவர் முயன்றபோது, அவரும் அவரது கணவர் ஆனந்தனும் விறகு வியாபாரி ஆறுமுகத்திடம் பெற்றிருந்த ரூ.20,000 முன்பணக் கடனை திருப்பிச் செலுத்தாமல் மருத்துவமனைக்குச் செல்லக்கூடாது என தடுத்து நிறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரசவ வலியால் அவதிப்பட்ட பெண்ணை மருத்துவமனைக்குச் செல்ல விடாமல் தடுத்ததாக கூறப்படும் இந்த சம்பவம் மனிதாபிமானத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது. கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதற்காக கர்ப்பிணிப் பெண்ணின் உயிரைப் பற்றியும் கவலைப்படாமல் தடுத்ததாக கூறப்படும் செயலை தேமுதிக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும். குற்றச்சாட்டில் தொடர்புடைய நபர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து, அதிகபட்ச தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும். மேலும், உயிரிழந்த தேன்மொழி மற்றும் அவரது பச்சிளம் குழந்தையின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், விறகு வியாபாரி ஆறுமுகம் அதனை வழங்க வேண்டும் என்றும் பிரேமலதா தெரிவித்துள்ளார். உயிரிழந்த தேன்மொழி மற்றும் அவரது குழந்தையின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு தேமுதிக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.