குஜராத் மாநிலம் அம்ரிலி மாவட்டத்தில் மகளை கொலை செய்துவிட்டு, அவரது உடலை வீட்டில் இருந்த பிரிட்ஜில் வைத்த தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்ரிலி மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயதான கிஷோர் தனுக், கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி மஞ்சுபின். இந்த தம்பதிக்கு 5 வயதில் ஹிமன்ஷி என்ற மகள் இருந்தார். கடந்த புதன்கிழமை மஞ்சுபின் தனது மகளை கணவர் கிஷோரிடம் விட்டுவிட்டு தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். அன்று இரவு அவர் கிஷோரை செல்போனில் தொடர்புகொள்ள முயன்றபோதும், அவர் அழைப்பை எடுக்கவில்லை. இதனால் மறுநாள் காலை தனது சகோதரரை கிஷோரின் வீட்டிற்கு சென்று பார்க்குமாறு மஞ்சுபின் கேட்டுக்கொண்டார். அதன்படி வீட்டிற்கு சென்ற மஞ்சுபினின் சகோதரர், அங்குள்ள அறையில் கிஷோர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும், 5 வயது ஹிமன்ஷியின் உடல் வீட்டில் இருந்த பிரிட்ஜுக்குள் இருப்பதையும் அவர் கண்டார். உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், தந்தை மற்றும் மகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது கிஷோர் எழுதி வைத்திருந்த 3 கடிதங்களையும் போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதங்களில், தனக்கு அதிகளவில் கடன் இருப்பதாகவும், தொழில் ரீதியாக கூட்டாளிகளுக்கு வழங்கிய பணம் திரும்பக் கிடைக்காததால் தற்கொலை செய்துகொள்வதாகவும் கிஷோர் குறிப்பிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும், தான் உயிரிழந்த பிறகு மகளால் தனியாக வாழ்க்கையை எதிர்கொள்வது சிரமமாக இருக்கும் என கருதி, அவரையும் கொலை செய்ததாக கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதனிடையே, மகளை கொலை செய்வதற்கு முன்பு அவருக்கு புதுத்துணிகளை அணிவித்து, பிறந்தநாள் கொண்டாட்டம் போன்று அறையில் பலூன்களை கட்டி அலங்கரித்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கடிதங்களை அடிப்படையாகக் கொண்டு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகளை கொலை செய்துவிட்டு தந்தையும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.