தமிழகத்தில் என்ஜினீயரிங் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த ஜூலை 13-ஆம் தேதி தொடங்கியது. முதற்கட்டமாக சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 20-ஆம் தேதி தொடங்கியது. பொதுப்பிரிவு மற்றும் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு ஆகிய பிரிவுகளுக்கான கலந்தாய்வு 3 சுற்றுகளாக நடத்தப்பட்டு, கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி நிறைவடைந்தது. பொதுப்பிரிவு கலந்தாய்வின் மூலம் மட்டும் 1 லட்சத்து 42 ஆயிரத்து 167 இடங்கள் நிரப்பப்பட்டன. இதுதவிர, சிறப்புப் பிரிவிலும் சில இடங்கள் நிரப்பப்பட்டன. இந்நிலையில், காலியாக இருந்த இடங்களை நிரப்புவதற்கான துணை கலந்தாய்வு செப்டம்பர் 3-ஆம் தேதி தொடங்கியது. இந்த கலந்தாய்வு செப்டம்பர் 7-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதன் மூலம் மொத்தம் 8 ஆயிரத்து 985 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இதன்படி, நடப்பு ஆண்டில் இதுவரை 1 லட்சத்து 53 ஆயிரத்து 280 மாணவர்களுக்கு என்ஜினீயரிங் படிப்புகளில் சேர்வதற்கான ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, எஸ்.சி.ஏ. பிரிவில் இருந்து எஸ்.சி. பிரிவுக்கு மாற்றுவதற்கான கலந்தாய்வு நேற்று தொடங்குவதாக இருந்தது. சில காரணங்களால் தாமதமான இந்த கலந்தாய்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. முதற்கட்டமாக மாணவர்கள் தங்களுக்கான விருப்ப இடங்களைத் தேர்வு செய்ய அவகாசம் வழங்கப்படுகிறது.