அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்றவர்களின் கணவர் அல்லது மனைவி வேலை செய்வதற்கு அனுமதிக்கும் எச்-4 பணி அனுமதியை ரத்து செய்யும் நடவடிக்கை பரிசீலனையில் இடம்பெற்றுள்ளது. இதனால் சுமார் 1 லட்சம் இந்திய குடும்பங்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகலாம்.எச்-1பி விசாதாரர்கள் கிரீன் கார்டுக்காக காத்திருக்கும் காலத்தில், அவர்களின் வாழ்க்கைத் துணைகள் அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக பணியாற்றுவதற்கு 2015-ம் ஆண்டு ஒபாமா நிர்வாகத்தின் கொள்கை மூலம் எச்-4 பணி அனுமதி வழங்கப்பட்டது. தற்போது டிரம்ப் நிர்வாகம் அந்த நடைமுறையை முடிவுக்கு கொண்டுவரும் முன்மொழிவை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத்துறையின் ஒழுங்குமுறைத் திட்டத்தில் சேர்த்துள்ளது.இதுவரை வழங்கப்பட்ட எச்-4 பணி அனுமதிகளில் 93 சதவீதம் இந்தியர்களுக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களில் 94 சதவீதம் பேர் உயர்கல்வி பெற்ற இந்தியப் பெண்கள். தற்போது சுமார் 1 லட்சம் இந்திய குடும்பங்கள் இந்த பணி அனுமதியைச் சார்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில் எச்-1பி விசாதாரர்களுக்கான கிரீன் கார்டு நடைமுறையில், குறிப்பாக இபி-2 மற்றும் இபி-3 பிரிவுகளில், பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இந்த நிலையில் எச்-4 பணி அனுமதி நீக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கைத் துணைகள் அமெரிக்காவில் தங்கி இருப்பதில் சிரமங்களை எதிர்கொள்ளக்கூடும்.எனினும், ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள எச்-4 பணி அனுமதிகள் உடனடியாக செல்லாததாகிவிடாது. அவை தொடர்ந்து செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நடவடிக்கை நீண்டகால ஒழுங்குமுறை நடவடிக்கையாக இடம்பெற்றுள்ளதால், முறையான விதிமுறை வெளியிடுதல், பொதுமக்களிடம் கருத்துகளைப் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதனால் இறுதி முடிவுக்கு வருவதற்கு பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் கூட ஆகலாம்.இதற்கிடையே, புதிய எச்-1பி விசாக்களுக்கு கூடுதலாக சுமார் ரூ.98 லட்சம் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்துள்ள நிலையில், தற்போது எச்-4 விசா வைத்திருப்பவர்களுக்கான பணி அனுமதி விவகாரமும் கவனம் பெற்றுள்ளது.