கிரைண்டர் செயலி மூலம் இளைஞரை தனிமையான பகுதிக்கு வரவழைத்து கத்தியால் குத்தி ரூ.4,000 பறித்துச் சென்றதாக கூறப்படும் சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் பம்பாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பச்சைமுத்து (30). இவர் கிரைண்டர் செயலியை பயன்படுத்தி வந்த நிலையில், அதன்மூலம் அவரை தொடர்புகொண்ட மர்ம நபர்கள், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை டோல்கேட் அருகே வருமாறு தெரிவித்துள்ளனர். இதனை நம்பிய பச்சைமுத்து அங்கு சென்றுள்ளார். அங்கிருந்து அவரை மதியனூர் அருகே மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கு மர்ம நபர்கள் பச்சைமுத்துவை கத்தியால் குத்திவிட்டு, அவரிடம் இருந்த ரூ.4,000 பணத்தை எடுத்துக்கொண்டு தப்பியுள்ளனர். கத்திக்குத்தில் பலத்த காயமடைந்த பச்சைமுத்துவை அப்பகுதி மக்கள் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணையை தொடங்கினர். பச்சைமுத்துவின் செல்போனில் இருந்த குறுஞ்செய்திகளை ஆய்வு செய்த போலீசார், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். அதில், விழுப்புரம் வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்த 2 பேருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.