உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 1951-ம் ஆண்டு உலக பிசியோதெரபி அறக்கட்டளை உருவாக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில், 1996-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் செப்டம்பர் 8-ம் தேதி உலக பிசியோதெரபி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பிசியோதெரபி மருத்துவத்தின் பங்களிப்பையும், உடல் இயக்கத்தை மேம்படுத்துவதில் பிசியோதெரபிஸ்டுகளின் முக்கியத்துவத்தையும் மக்களுக்கு எடுத்துரைப்பதே இந்த நாளின் நோக்கமாகும்.வைகோ தனது அறிக்கையில், பிசியோதெரபி என்பது வலியைக் குறைப்பதற்கான சிகிச்சை மட்டுமல்ல என்றும், உடல் இயக்கம், செயல்பாடு, செயல்திறன், சுயசார்பு மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றும் தனித்துவமான மருத்துவத் துறை என்றும் குறிப்பிட்டுள்ளார்.பக்கவாதம், நரம்பியல் பாதிப்புகள், தசை, எலும்பு மற்றும் மூட்டு சார்ந்த பிரச்சினைகள், முதுகுத்தண்டு பாதிப்புகள், விளையாட்டுக் காயங்கள், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய மீட்பு, முதியோரின் இயக்கத்திறன் குறைபாடுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான புனர்வாழ்வு உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் பிசியோதெரபி மருத்துவத்தின் பங்கு முக்கியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8-ம் தேதி உலக பிசியோதெரபி தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள், இருதய மற்றும் இரத்த நாள நோய்கள் மற்றும் பக்கவாதத்தைத் தடுப்பது, அவற்றை நிர்வகிப்பது மற்றும் புனர்வாழ்வு வழங்குவதில் பிசியோதெரபி மற்றும் உடல் இயக்கத்தின் பங்கை எடுத்துரைக்கிறது.மேலும், தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் மாநில அளவிலான பிசியோதெரபி மாநாடு மற்றும் விருது வழங்கும் விழா வரும் 27.09.2026 அன்று கோவையில் நடைபெற உள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார்.இந்த நிகழ்ச்சி வெற்றி பெறவும், மருத்துவத் துறையில் மனிதநேயத்துடன் சிறப்பான பணியாற்றி வரும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த அனைவருக்கும் உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு தனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.