உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் பிரபல நாட்டுப்புற பாடகர் ரிங்கு ராஜ்வாடா (31) உயிரிழந்தார். ஆக்ரா மாவட்டம் மிடாகர் கிராமத்தைச் சேர்ந்த ரிங்கு ராஜ்வாடா, அப்பகுதியில் நடைபெறும் பல்வேறு கோவில் விழாக்களில் ஆன்மிக நாட்டுப்புற பாடல்களை பாடி பிரபலமானவர். இந்த நிலையில், நேற்று மதுரா மாவட்டம் பராலியில் இருந்து பராக் நகரை நோக்கி ரிங்கு ராஜ்வாடா மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். நெடுஞ்சாலையில் பல்தேவ் பகுதியை கடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. விபத்தில் பலத்த காயமடைந்த ரிங்கு ராஜ்வாடாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனம் மற்றும் அதன் ஓட்டுநரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.