ஈரானில் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் பயணிகள் அச்சத்தில் அலறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானம் நடுவானில் கடுமையாக அதிர்ந்ததுடன், கேபினுக்குள் இருந்த பொருட்களும் கீழே விழுந்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. ஈரானின் மஷாத் நகரில் இருந்து கெர்மன்ஷா நகரை நோக்கி செபெஹ்ரான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானம் பயணிகளுடன் புறப்பட்டது. விமானம் வானில் எழுந்த சில நிமிடங்களிலேயே அதன் டயர்களில் ஒன்றின் வெளிப்புற பகுதி கழன்று விழுந்ததாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக விமான என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், விமானம் நடுவானில் கடுமையாக குலுங்கியது. எதிர்பாராத வகையில் விமானம் அதிர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். விமானத்தின் அதிர்வு காரணமாக பயணிகள் அமர்ந்திருந்த கேபின் பகுதியின் உட்புற மேற்கூரைப் பகுதிகள் பெயர்ந்து கீழே விழுந்தன. மேலும், மேல்புறத்தில் இருந்த உடமைகள் வைக்கும் பெட்டிகள் திறந்ததால், அவற்றில் இருந்த பைகள் மற்றும் பொருட்கள் பயணிகள் மீது விழுந்தன. இதனால் விமானத்துக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டது. நிலைமையை உணர்ந்த விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு நடந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தார். பின்னர் விமானம் மீண்டும் மஷாத் விமான நிலையத்துக்கு திருப்பி கொண்டுவரப்பட்டு அவசரமாகவும் பாதுகாப்பாகவும் தரையிறக்கப்பட்டது. இதனால் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், விமானம் கடுமையாக குலுங்கியபோது பயணிகள் அச்சத்தில் அலறிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, தற்போது வைரலாகி வருகின்றன.