அரசியல் என்ற பெயரில் ஆபாசம், அவதூறு மற்றும் இரட்டை அர்த்தம் கொண்ட கருத்துகளை வெளியிடுவதையே தி.மு.க.வினர் அரசியலாகக் கொண்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விமர்சித்துள்ளார். சட்டப்பேரவையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை அவமதிக்கும் வகையில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பேசியதாகக் கூறி, அவரைக் கண்டித்து தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, முதல்-அமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்ததுடன், ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு தற்போதைய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “தி.மு.க.வைப் பற்றி சிறு குழந்தைகளிடம் கேட்டாலும், அக்கட்சியினர் ஆபாசமாகவும், கீழ்த்தரமாகவும், அவதூறாகவும் பேசுவதைப் பற்றி கூறுவார்கள். இதைத் தவிர வேறு விதமான அரசியல் அவர்களுக்குத் தெரியவில்லை. கருத்தியல் அடிப்படையில் பேசுவதற்கு அந்தக் கட்சியில் ஆட்கள் இல்லை. முன்னாள் அமைச்சர் சேகர்பாபு இன்று மிகவும் தரக்குறைவாகப் பேசியுள்ளார். அறநிலையத்துறை அமைச்சராக இருந்து ஆன்மிகத் தலங்களை நிர்வகித்த ஒருவர் இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. தி.மு.க.வில் அரசியல் நாகரிகம் முற்றிலும் அழிந்துவிட்டது. மூன்றாம் தர பேச்சாளர்களைப் போல அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சேகர்பாபு இன்று பேசியதை அவரது வீட்டில் உள்ள பேரக்குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் போட்டுக் காண்பிப்பாரா? இவ்வளவு தரக்குறைவாகப் பேசுவதுதான் அரசியலா? இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். இவ்வாறு கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேச வேண்டும் என்று எங்களுடைய முதல்-அமைச்சர் எங்களுக்கு ஒருபோதும் கற்றுக் கொடுக்கவில்லை. ஒழுக்கத்துடனும் நேர்மையுடனும் பேசுவதையே அவர் எங்களுக்கு கற்றுத் தந்துள்ளார். தி.மு.க.வினர் பயன்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்த எங்களுக்குத் தெரியாது என்பதல்ல. ஆனால், எங்களை முதல்-அமைச்சர் அப்படி வளர்க்கவில்லை. முன்னாள் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினரான மு.க. ஸ்டாலின் தனது கட்சியினரை எவ்வாறு வளர்த்திருக்கிறார் என்பதற்கு சேகர்பாபுவின் பேச்சே ஒரு உதாரணம். அண்ணா காலத்தில் இருந்த தி.மு.க.வாக இன்றைய தி.மு.க. இல்லை. அரசியல் என்ற பெயரில் ஆபாசம், அவதூறு மற்றும் இரட்டை அர்த்தப் பேச்சுகளை முன்வைப்பதையே இன்றைய தி.மு.க. தனது அரசியல் நடவடிக்கையாகக் கொண்டுள்ளது,” என்று அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.