சென்னையில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற இளம் கலைஞர்களுக்கான மாநில அளவிலான கலைப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் பரிசுகளை வழங்கி பாராட்டினார். தமிழ்நாட்டில் இளம் கலைஞர்களின் திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட மற்றும் மாநில அளவிலான கலைப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 17 முதல் 35 வயதுக்குட்பட்ட இளம் கலைஞர்கள் பங்கேற்கும் இந்தப் போட்டிகள் குரலிசை, பரதநாட்டியம், கருவியிசை, ஓவியம் மற்றும் கிராமியக்கலை என 5 பிரிவுகளில் நடைபெறுகின்றன. அந்த வகையில், 2026-ம் ஆண்டுக்கான மாநில அளவிலான போட்டிகள் சென்னையில் உள்ள இசைக்கல்லூரி வளாகத்தில் செப்டம்பர் 8-ம் தேதி நடைபெற்றன. மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் இடங்களைப் பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றனர். மாநில போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா செப்டம்பர் 9-ம் தேதி சென்னை அருங்காட்சியக கலையரங்கில் நடைபெற்றது. விழாவில் அமைச்சர் ராஜ்மோகன் வெற்றி பெற்ற இளம் கலைஞர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவையொட்டி உருபாணர் குழுவினரின் தொல்கருவியிசை, அனுஷம் குழுவினரின் ‘புவி காப்போம்’ நாட்டிய நிகழ்ச்சி மற்றும் கிராமியக் கலைஞர்களின் தென்னிந்திய கிராமியக்கலைக்கூடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் மகேஸ்வரி ரவிக்குமார் வரவேற்புரை வழங்கினார். அருங்காட்சியகங்கள் துறை இயக்குநர் தே.பாஸ்கர பாண்டியன் வாழ்த்துரை வழங்கினார். கலை பண்பாட்டுத்துறை இணை இயக்குநர் ஜெ.கார்குழலி நன்றியுரை வழங்கினார். டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழக பதிவாளர் பூமாலினி, தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி முதல்வர் கும்பகோணம் ஆ.சரவணன் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர். போட்டிகளில் பரிசு பெற்றவர்கள் குரலிசை: முதல் பரிசு – பிரீத்தி சேதுராமன் (சென்னை) இரண்டாம் பரிசு – ச.வினோதா (காஞ்சிபுரம்) மூன்றாம் பரிசு – சி.மகன்யாஸ்ரீ (கிருஷ்ணகிரி) கருவியிசை: தவில் – பி.வெங்கடேசன் (நாமக்கல்) வயலின் – சா.முகுந்தன் (மயிலாடுதுறை) நாதஸ்வரம் – ம.முருகன் (சென்னை) பரதநாட்டியம்: முதல் பரிசு – மு.இதிகாசினி (திருச்சிராப்பள்ளி) இரண்டாம் பரிசு – ம.சுகி பிரார்த்தனா (திருவள்ளூர்) மூன்றாம் பரிசு – ரா.மகேஸ்வரன் (சிவகங்கை) ஓவியம்: முதல் பரிசு – மா.ஸ்ரீநிலவன் (தஞ்சாவூர்) இரண்டாம் பரிசு – மா.கிஷோர் (ராணிபேட்டை) மூன்றாம் பரிசு – பொ.சுகுமார் (காஞ்சிபுரம்) கிராமியக்கலை: முதல் பரிசு – கு.பார்த்தீபன் (தருமபுரி) இரண்டாம் பரிசு – பி.பிரசன்னா (திருவள்ளூர்) மூன்றாம் பரிசு – க.அழகேஸ்வரன் (விருதுநகர்) ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக ரூ.30,000, இரண்டாம் பரிசாக ரூ.20,000, மூன்றாம் பரிசாக ரூ.10,000 வழங்கப்பட்டது. மொத்தம் 15 இளம் கலைஞர்களுக்கு ரூ.3 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.