தென்னகத்தின் காசி என போற்றப்படும் ராமேசுவரத்திற்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அமாவாசை நாட்களில் வழக்கத்தைவிட பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் சர்வ அமாவாசை தினங்களில் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, மறைந்த முன்னோர்களுக்காக திதி மற்றும் தர்ப்பணம் உள்ளிட்ட சடங்குகளை செய்வது பக்தர்களின் வழக்கமாக உள்ளது. அந்த வகையில், ஆவணி மாத சர்வ அமாவாசையையொட்டி இன்று அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, ராமநாதசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேசுவரம் வந்தனர். அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள், பின்னர் கடற்கரையில் அமர்ந்து புரோகிதர்கள் மூலம் மறைந்த முன்னோர்களுக்காக திதி, தர்ப்பணம் உள்ளிட்ட பூஜைகளை செய்து வழிபட்டனர். இதைத்தொடர்ந்து கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினர். பின்னர் ராமநாதசுவாமி கோவிலுக்குச் சென்ற பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்ட நெரிசலின்றி பாதுகாப்பாக தரிசனம் செய்யும் வகையில் கோவில் வளாகத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இதன் மூலம் பக்தர்கள் வரிசையாக சென்று சாமி தரிசனம் செய்தனர். மேலும், ராமேசுவரத்திற்கு வந்த பக்தர்கள் தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனை பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள கடல் அழகை ரசித்தனர்.