தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட விதிமீறல்களை கட்டுப்படுத்த தமிழக போக்குவரத்து ஆணையரகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி, அக்டோபர் 19-ம் தேதி ஆயுத பூஜை, நவம்பர் 8-ம் தேதி தீபாவளி என அடுத்தடுத்து விடுமுறை மற்றும் பண்டிகை நாட்கள் வர உள்ளன. இதனால் ஆம்னி பஸ்களின் சேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த காலகட்டத்தில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தல், வரி செலுத்தாமல் நிலுவை வைத்திருத்தல், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக சுமைகளை ஏற்றிச் செல்லுதல், உரிய பர்மிட் இன்றி பஸ்களை இயக்குதல் உள்ளிட்ட விதிமீறல்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.இதனை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் வட்டார போக்குவரத்து அதிகாரி உள்ளிட்ட 3 பேர் இடம்பெறுவார்கள்.இந்த குழுக்கள் நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய பஸ் நிலையங்களில் திடீர் சோதனைகளை மேற்கொண்டு ஆம்னி பஸ்களின் இயக்கத்தை கண்காணிக்கும். சோதனையில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும். தேவையான சந்தர்ப்பங்களில் பர்மிட் ரத்து உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.