நடிகர் சிரஞ்சீவியின் மகளும் திரைப்படத் தயாரிப்பாளருமான கொனிடெலா சுஷ்மிதாவுக்கு ஆந்திரப் பிரதேசத்தில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. விஜயவாடாவில் உள்ள புகழ்பெற்ற இந்திரகீலாத்ரி துர்கம்மா தேவஸ்தான அறங்காவலர் குழுவில் அவர் சிறப்பு அழைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த புதிய பொறுப்பின் மூலம், தேவஸ்தான நிர்வாகத்தில் சுஷ்மிதாவும் பங்களிக்க உள்ளார். அறங்காவலர் குழு மற்றும் நிர்வாக அதிகாரியின் செயல்பாடுகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவதுடன், முக்கிய திருவிழாக்கள் மற்றும் ஜாத்திரை நடைபெறும் காலங்களில் நிர்வாகத்துக்கு தேவையான ஒத்துழைப்பையும் அவர் வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரஞ்சீவி குடும்பத்தைச் சேர்ந்த பலரும் ஏற்கனவே ஆந்திரப் பிரதேசத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்து வருகின்றனர். சிரஞ்சீவியின் மனைவி சுரேகா, தேவஸ்தான அறங்காவலர் குழுவில் உறுப்பினராக உள்ளார். அவரது சகோதரரும் நடிகருமான பவன் கல்யாண், ஆந்திரப் பிரதேச துணை முதல்-மந்திரியாக உள்ளார். மற்றொரு சகோதரரான நாகபாபுவும் சட்ட மேலவை உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில், சிரஞ்சீவியின் மகள் சுஷ்மிதாவும் தற்போது விஜயவாடா துர்கம்மா தேவஸ்தான அறங்காவலர் குழுவில் சிறப்பு அழைப்பாளராக இணைந்துள்ளார். சினிமா துறையைத் தாண்டி சிரஞ்சீவி குடும்பத்தினர் பொதுவாழ்விலும் முக்கிய பொறுப்புகளை வகித்து வருவது கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக, விஜயவாடாவின் முக்கியத்துவம் வாய்ந்த துர்கம்மா தேவஸ்தான நிர்வாகத்தில் சுஷ்மிதாவுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பொறுப்பு தற்போது பேசுபொருளாகியுள்ளது.