தெலுங்கானா மாநிலம் மகபூப் நகர் நியூ டவுன் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதில் இருந்த சிலர், ஒரு பொருளை சாலையில் தூக்கி வீசியுவிட்டு வேகமாக அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் சாலையோரத்தில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது. அந்த வழியாக சென்ற சில இளைஞர்கள் இதைக் கவனித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணையில், ஆட்டோவில் வந்தவர்கள் பச்சிளம் குழந்தையை சால்வை மற்றும் சிறிய மெத்தையில் சுற்றிய நிலையில் சாலையில் விட்டுச் சென்றது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, குழந்தையை சாலையில் விட்டுச் சென்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே, குழந்தையை தாங்களே வளர்த்துக் கொள்வதாகக் கூறி பலர் மருத்துவமனைக்கு வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் குழந்தையை அவர்களிடம் ஒப்படைக்கும் அதிகாரம் மருத்துவர்களுக்கு இல்லை என தெரிவிக்கப்பட்டது. மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தை அணுகுமாறு அவர்களுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.