மதுரை ஆனையூர் அருகே காணாமல் போன 11-ம் வகுப்பு மாணவர், கழிவுநீர் குட்டையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவரின் உடற்கூறு ஆய்வில், அவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் வலைதளப் பதிவில், சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். தவெக அரசின் அலட்சியமான அணுகுமுறையால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக விமர்சித்துள்ள அவர், “இன்னும் எத்தனை உயிர்கள் பலியாக வேண்டும்?” என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளார். மேலும், மாணவரின் மரணம் தொடர்பாக எந்தவித சமரசமும் இன்றி முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், குற்றத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.