சென்னையில் அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் இருசக்கர வாகனம் மீது மோதியதில் 26 வயது இளைஞர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சமூக நலத்துறை அமைச்சராக இருப்பவர் ஜெகதீஸ்வரி. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் இருந்து தவெக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சட்டசபை விடுமுறையையொட்டி தொகுதிக்கு சென்றிருந்த அமைச்சர், விடுமுறை முடிந்ததைத் தொடர்ந்து மீண்டும் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக சென்னைக்கு வந்துள்ளார். அவர் அரசு வாகனத்தில் பயணித்த நிலையில், முன்னதாக எஸ்கார்ட் பாதுகாப்பு வாகனமும், பின்னால் அமைச்சரின் சொந்த வாகனமும் சென்றதாக கூறப்படுகிறது.இந்நிலையில், சென்னை காட்டாங்குளத்தூர் அருகே சென்றபோது அமைச்சரின் சொந்த கார், இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மீது மோதியதாக தெரிகிறது. இந்த விபத்தில் 26 வயதான இறையன்பு என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கிறது.விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், அமைச்சரின் சொந்த வாகனத்தை பறிமுதல் செய்து, அதை ஓட்டி வந்த ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.