மாரி செல்வராஜின் உதவி இயக்குநராக பணியாற்றிய எஸ்.பி.அரவிந்த் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் `மாகாளி'. இப்படத்தில் அமீர் கதையின் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.`பரியேறும் பெருமாள்', `கர்ணன்', `மாமன்னன்', `வாழை', `பைசன் காளமாடன்' உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென தனித்துவமான இடத்தை உருவாக்கியவர் இயக்குநர் மாரி செல்வராஜ். தற்போது அவர் `மஞ்சணத்தி' என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார்.இதற்கிடையே, தனது மனைவி திவ்யா மாரி செல்வராஜுடன் இணைந்து நவ்வி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் புதிய திரைப்படம் ஒன்றை மாரி செல்வராஜ் தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கு `மாகாளி' என பெயரிடப்பட்டுள்ளது.மாரி செல்வராஜ் இயக்கிய `பரியேறும் பெருமாள்', `கர்ணன்', `மாமன்னன்' ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய எஸ்.பி.அரவிந்த், `மாகாளி' மூலம் இயக்குநர் பொறுப்பை ஏற்றுள்ளார். இப்படத்தில் அமீருடன் ஸ்வாசிகா, அனிஷ்மா அனில்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். செல்வரத்தினம் பிரதீப் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். மனிதர்களின் வாழ்வில் ஏற்படும் வலி, அவர்களைச் சுற்றியுள்ள எல்லைகள் மற்றும் ஆழமான சமூக அக்கறை ஆகியவற்றை மையமாகக் கொண்ட கதையாக `மாகாளி' உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.இந்நிலையில், `மாகாளி' படத்தின் முதல் பார்வை போஸ்டரை மாரி செல்வராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனுடன் படத்தின் படப்பிடிப்பும் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதனால் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.