பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, கொடைக்கானல் அண்ணா பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக அமைச்சர் மரிய வில்சன் சென்றார். ஆனால், பூங்கா பூட்டப்பட்டிருந்ததால் அவர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த அமைச்சர், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முறையாக மேற்கொள்ளாதது குறித்து உள்ளூர் நிர்வாகிகளிடம் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதற்கிடையில், ஊழியர் ஒருவர் பூட்டை உடைத்து பூங்காவை திறக்க முயன்றார். அப்போது, “பூட்டை உடைக்க வேண்டாம். திண்டுக்கல் அல்லது மதுரையில் மாலை அணிவித்து கொள்கிறேன்” என அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார். இதையடுத்து சில நிமிடங்களில் பூங்காவின் பூட்டு திறக்கப்பட்டது. பின்னர் அண்ணா சிலைக்கு அமைச்சர் மரிய வில்சன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.