அசாம் மாநிலம் கோலாகாட் மாவட்டத்தில், கழுத்தில் சிக்கியிருந்த பெரிய டிராக்டர் டயரால் அவதிப்பட்டு வந்த காட்டு யானையை வனத்துறையினர் பல மணி நேர போராட்டத்துக்குப் பிறகு பத்திரமாக மீட்டனர். கோலாகாட் மாவட்டத்தின் நுமாலிகர் மற்றும் மரோங்கி வனப்பகுதிகளில் காட்டு யானைகள் உணவு தேடி வருவது வழக்கம். இந்நிலையில், அப்பகுதியில் சுற்றித்திரிந்த யானையின் கழுத்தில் பழைய டிராக்டர் டயர் ஒன்று எதிர்பாராதவிதமாக சிக்கி, இறுக்கமாக மாட்டிக் கொண்டது. கழுத்தில் டயர் சிக்கிய நிலையில் யானை நடமாடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதால், பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இதையடுத்து அசாம் வனத்துறை அதிகாரிகள் மற்றும் வனவிலங்கு காப்பக மருத்துவக் குழுவினர் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அடர்ந்த வனப்பகுதி மற்றும் தேயிலைத் தோட்டங்களில் யானையைத் தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. நேற்று (வியாழக்கிழமை) மாலை யானையை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்தனர். பின்னர் அதற்கு மயக்க மருந்து செலுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து, கழுத்தில் இறுக்கமாக சிக்கியிருந்த டயரை பாதுகாப்பாக வெட்டி அகற்றினர். டயர் அகற்றப்பட்ட பிறகு யானைக்கு தேவையான முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர், அது மீண்டும் தனது கூட்டத்துடன் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது. வனத்துறையினரின் விரைவான மற்றும் அர்ப்பணிப்பான மீட்புப் பணிக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.