நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், அக்டோபர் 3-ந்தேதி முதல் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் பக்தர்களுக்காக திறந்திருக்கும் என தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் தெரிவித்துள்ளார். வேளாங்கண்ணி பேராலயம் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்லும் முக்கிய ஆன்மிகத் தலமாக திகழ்கிறது. இதனால், ஆண்டு முழுவதும் இங்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து காணப்படுகிறது. பேராலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா, இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெற்றது. கடந்த ஆகஸ்ட் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா, செப்டம்பர் 8-ந்தேதி வரை 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிலையில், வரும் அக்டோபர் 3-ந்தேதி முதல் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் 24 மணி நேரமும் திறந்திருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்கள் தங்களுக்கு வசதியான எந்த நேரத்திலும் பேராலயத்திற்கு வந்து பிரார்த்தனை செய்ய முடியும் என ஆயர் சகாயராஜ் தெரிவித்துள்ளார்.