வடகொரியா தனது கடற்படையில் 5,000 டன் எடை கொண்ட ‘காங் கோன்’ என்ற அதிநவீன வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பு போர்க்கப்பலை அதிகாரப்பூர்வமாக இணைத்துள்ளது. அணுசக்தி தடுப்பு காவல்படையின் ஒரு பகுதியாக இந்த கப்பல் செயல்பட உள்ளது. கொரிய தீபகற்பத்தில் வடகொரியா மற்றும் அமெரிக்கா, தென்கொரியா இடையே தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், தனது ராணுவ திறனை வெளிப்படுத்தும் வகையில் வடகொரியா புதிய ஆயுதங்கள் மற்றும் போர்க்கப்பல்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கிழக்குக் கடல் கடற்படைப் பிரிவில் ‘காங் கோன்’ போர்க்கப்பல் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. ‘சோ ஹியோன்’ வகையைச் சேர்ந்த இரண்டாவது போர்க்கப்பலான இது, பல்வேறு கட்டங்களில் போர் திறன் மற்றும் நம்பகத்தன்மை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போர்க்கப்பலை கடற்படையில் இணைக்கும் நிகழ்ச்சியில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் நேரில் பங்கேற்றார். அப்போது ராணுவத்தினரிடம் பேசிய அவர், போர்க்காலங்களில் அணுசக்தி போர் அமைப்புகளை உடனடியாக செயல்படுத்தி, எதிரிகளுக்கு பதிலடி கொடுக்கும் திறன் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், அதற்கேற்ற வகையில் ஒட்டுமொத்த வடகொரிய கடற்படையையும் அணுசக்தி ஆயுதங்களை ஏந்திய படையாக மாற்ற வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். கிம் ஜோங் உன்னின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், குறிப்பாக அமெரிக்கா மற்றும் தென்கொரியா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.