5 ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கு அரசு அனுமதி வழங்கக் கூடாது - வைகோ
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

15 Sep 2026 www.thinathulir.com

5 ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கு அரசு அனுமதி வழங்கக் கூடாது - வைகோ

5 ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கு அரசு அனுமதி வழங்கக் கூடாது - வைகோ

காவிரி படுகை பகுதியில் புதிதாக 5 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என தமிழ்நாடு அரசை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள காவிரி படுகையில், CY-OS/90/1 என்ற பிளாக்கில் உள்ள PY-3 எண்ணெய் பகுதியில் ஹார்டி எக்ஸ்புளோரேஷன் அண்ட் புரொடக்ஷன் இந்தியா நிறுவனம் ஆபரேட்டராக செயல்பட்டு வருகிறது. சுமார் 81 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த பிளாக், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் உற்பத்தி பகிர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. தற்போது PY-3 பகுதியில் முழு அளவில் எண்ணெய் உற்பத்தி நடைபெற்று வருவதாகவும், ஹைட்ரோ கார்பன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் மேலும் 5 கிணறுகளை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் ஹார்டி எக்ஸ்புளோரேஷன் அண்ட் புரொடக்ஷன் இந்தியா நிறுவனம் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திடம் கோரியுள்ளது. புதிதாக உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரோ கார்பன் கடலுக்கடியில் அமைக்கப்படும் குழாய்கள் மூலம் FPSO-க்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சுத்திகரிப்பு மற்றும் சேகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் கப்பல் மூலம் பயன்பாட்டுக்கு எடுத்துச் செல்லப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இத்திட்டத்துக்காக புதிய நிலம் எதையும் கையகப்படுத்த வேண்டியதில்லை என்றும், கடற்கரையோரத்தில் கூடுதல் வசதிகள் தேவையில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உள்ள காவிரி படுகையில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கான இந்த அனுமதி கோரிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார். தமிழகத்தை ஒட்டிய கடலோரப் பகுதிகள், கடற்பகுதிகள் மற்றும் வேளாண் நிலங்களில் பல்வேறு ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு உரிமம் வழங்கியிருந்தாலும், மறுமலர்ச்சி திமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக கடந்த காலங்களில் மாநில அரசு அவற்றுக்கு அனுமதி வழங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதே நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். சுற்றுச்சூழல், கடல் வளங்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்தத் திட்டத்துக்கும் மாநில அரசு அனுமதி அளிக்கக்கூடாது என வைகோ தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.